Monday, March 23, 2009

உன்னைப் பிரியும் நொடியில்

நிலவு நிறைக்கிறது
தெருவை- மெல்ல
சிணுங்கும் Cell உம்
"செல்லமாய் செல்லம் என்றாயடி"
எனப் பாடிச் செல்கிறது

ஒவ்வொரு முறையும்
உந்தன் அழைப்பாய்
இருக்குமான - எடுக்கையில்
எவர் எவரோ

குரல் எல்லாம்-
எனைநலம் விசாரிக்கும்

கசந்த நெஞ்சின்
அடியிலிருந்து-மெல்லெனவொரு
அழுகுரல் கண்களின்
ஓரம்கண்ணீராய் தெறிக்கும்
நாம் தூர-இருக்கையில்
அருகில் இருந்தோம்
இப்போ-அருகிலிருந்தும்
அண்மையிழந்தோம்...

உந்தன் Soap இன் வாசமும்
தோளின் வளைவில்
சாய்ந்திருக்கையில் நாசி துளைத்த
உந்தன் சென்டின் வாசமும்
மெளனம் பழகியபடி
கைகள் கோர்த்து
வீதிகள் கால்களால்
அளந்த வேளையில்
உந்தன் கண்கள் பேசிய
கவிகளின் ஆழமும்
பாதி பாதியாய் பகிர்ந்து குடித்த-
கோப்பைத் தேநீரின் சுவையும்
இன்னமும் தித்தித்தபடி
எந்தன் நினைவுகளில்...

அன்னை கைவழியுந்தன்
புகைப்படம் என்னை அடைகையில்
என்னில் இல்லை எந்த மாற்றமும்
"உங்களுக்குப் பிடித்தால் சரி" எனும்
மூன்று வார்த்தைகளில்
என்னுலகம்- உன் உலகமானது..

எது உன்னில் என்னைக் கரைத்தது?
உந்தன் பேச்சா- இல்லை
உந்தன் புன்னகையா-இல்லை
என்னை நானாகவே ஏற்றுக் கொண்ட
உந்தன் இயல்பா
சொல்லத் தெரியவில்லை
இன்று வரை.....

தொலைபேசித் தொலைவுகள்
சுருங்கிப் போகுமொருநாளில்-Ottawa
வந்தாய் நீயும்
மறக்க முடியாதநாள்-
மறக்கமுடியாத நேரம்
செல்லமாய்ச் சிணுங்கிய
தொலைபேசியில்
உந்தன் குரல்
"ஒரு நிமிடம் Please
கீழே வர முடியுமா?" என்றது

எந்தன் கண்கள்-என்னையே
நம்ப மறுத்தன-கைகள்
நிறைந்த Red Roses
முகம் மறைக்க-எனைப்பார்த்து
தலைசாய்த்து-நீ
சிரித்துவந்த நொடியில்
என்னை இழந்தேன் நான்

மெல்லச் சிரித்தபடி
"உங்களைப் பார்க்க
வேண்டும் போலிருந்தது அதுதான்...."
என வார்த்தைகள் கிடைக்காமல்
நீயும்- வெட்கத்தை
எங்கே கரைப்பதெனத்
தெரியாமல் நானும்
நிமிடம் தொலைத்தோம்
வெறும் "Bye" யோடு
முடிந்ததெம் சந்திப்பு

இரண்டாவது மூன்றாவது-என
இது உனது ஐந்தாவது சந்திப்பு
உன்னை இன்று
பிரிகையில்-முன்னிலும்
அதிகமாய் வலித்தது மனது
கண்கள் கலங்கிக்
கரை உடைக்கையிலும்
கைகள் இறுக்கி
அழுகை அடக்கினேன்
ஏனெனில் எனக்குத் தெரியும்
எனது அழுகைக்காய்
காத்துக் கொண்டிருக்கிறது
உந்தன் விழிகளின் ஓரமாய்
வெடித்துச் சிதறதயாராய் கண்ணீரென....

எலும்புகள் உடையும் வண்ணம்-
இறுக்க அனைத்து-நெற்றிமுடி
கோதி- ஈரமுத்தம்
பதித்து-கோர்த்தகைகள்
பிரிக்க மனமற்று
பிரிந்து போகிறாய்- நீ
நிலவு நிறைக்கிறது தெருவை-
மெல்லமாய் "செல்லம் என்றாயடி" எனப்
பாடுகிறது cell உம்
ஆனால்-எதுவும் தடுக்கவில்லை
இங்கே வெடித்துச் சிதறும்-உனக்குக்
கேட்காத என் அழுகுரலை

3 comments:

  1. கவிதை நன்றாக இருக்கிறது

    அன்பூடன்
    சக்தி

    ReplyDelete
  2. உணர்வுகளை அழகாக எழுத்தில் கொண்டு வர முடிகிறது உங்களால். வாழ்த்துகள்.

    அனுஜன்யா

    ReplyDelete